.
.

.

Latest Update

காதலியின் செருப்பைத் தேடியலையும் கதை ‘என் ஆளோட செருப்பக் காணோம்’


ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி நடிப்பில் வெளியாகி, வணிக ரீதியில் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இணை தயாரிப்பாளரும், பல வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்தவருமான வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், தனது சகோதரர் விஜயனுடன் இணைந்து, ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களை இயக்கிய நடிகரும், இயக்குநருமான ஜெகன்நாத், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.‘பசங்க’ படத்தில் ‘பக்கோடா பாண்டி’யாக நடித்த பாண்டி, இப்படத்தில் ‘தமிழ்’ என்ற பெயர் மாற்றத்துடன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுகசெல்வன், பாடலிசை – இஷான் தேவ், பின்னணி இசை – தீபன் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார், கலை – என்.கே.பாலமுருகன், பாடல்கள் – விஜயசாகர், நடனம் – பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி, தினா, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் ஜி.என்., மக்கள் தொடர்பு – நிகில், முதன்மை செயல் தயாரிப்பு – அருண் கணேசன், எம்.அரவிந்த், தயாரிப்பு வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், எழுத்து, இயக்கம் – ஜெகன்நாத்.இப்படம் குறித்து இயக்குநர் ஜெகன்நாத் பேசுகையில், “நாயகியையும், அவள் தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளையும் சுற்றி நடக்கும் கதைதான், இந்த ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ திரைப்படம்.

ஒரு ஐப்பசி மாத அடை மழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளைத் தேடி, தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகனான கித்தான். 30 நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்படம்.

இறுதியில், செருப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் வெற்றி பெற்றானா..? தொலைந்த செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா..? அந்த செருப்புகள் நாயகனையும் நாயகியையும் ஒன்று சேர்த்ததா..? என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறோம்.கடற்கரை நகரங்களான கடலூர் மற்றும் புதுச்சேரியில் இக்கதை நிகழ்வதாக கதைக் களம் அமைத்திருக்கிறோம். மழையும், செருப்பும்தான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயங்கள். இதனால் மழைக் காலத்திலேயே இதன் முழு படப்பிடிப்பையும் நடத்தியுள்ளோம். பெரும்பாலான காட்சிகளில் மழை இருக்கும். மழையை ஒரு கேரக்டராகவே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளில் செண்டிமென்ட்டும், செண்டிமென்ட் காட்சிகளில் நகைச்சுவையும் கலந்திருக்கும்.

சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடலூர் மற்றும் புதுச்சேரியில் 50 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு மாறுதலான படமாக இருக்கும்…” என்றார் இயக்குநர் ஜெகன்நாத்.

“படத்தின் தலைப்பு இத்தனை நீளமாகவும் ‘செருப்பு’ என்கிற வார்த்தையெல்லாம் வருகிறதே…?” என்று கேட்டதற்கு, “இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் கதைக்குப் பொருத்தமாக இருக்கட்டுமே என்றுதான் வைத்தோம். நிச்சயமாக இதில் அசிங்கமாக பேசக் கூடிய விஷயமாக இருக்காது.. தியேட்டரில் மக்கள் மிக எளிதாக எடுத்துக் கொண்டு நகைச்சுவையை ரசிப்பார்கள்..” என்றார் தன்னம்பிக்கையுடன்..!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles