.
.

.

Latest Update

சிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்



சிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறி, இணையதளத்தின் 

வாயிலாக நடைபெறும் திரைப்படத் திருட்டைத்தடுக்கத் தவறிய சங்க நிர்வாகிகளின் போக்கை கண்டித்தும், இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து தங்களுக்கு அறிவிப்பு கொடுத்தல்

கடந்த ஆண்டு தொடர்ந்து திரைப்பட திருட்டில் ஈடுபட்டுவரும் 9 திரையரங்குகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பியதன் பேரில் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அந்த 9 திரையரங்குகளுக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என பத்திரிகைகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு தலைவர் விஷால் அவர்களால் ஆவேச பேட்டியும் தரப்பட்டது.

மேலும் இது குறித்து QUBE நிறுவனத்திற்கும், திரைப்பட உரிமையாளர் சங்கத்திற்கும் எழுத்து பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தன்னுடைய திரைப்படமான ‘ சண்டைக்கோழி 2 ’ வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை ஏதும் செய்வார்களோ என்ற அச்சத்தில், சுயலாபம் அடையும் பொருட்டு அவரது படமான சண்டைக்கோழி 2 படத்தை அந்த ஒன்பது திரையரங்குகளுக்கும் திரையிட கொடுத்து ஒரே நாளில் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து தயாரிப்பாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு நிர்வாகக்குழு எடுக்கப்பட்ட முடிவை மீறி தலைவரே செயல்பட்டது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
மேலும் மேற்சொன்ன நடவடிக்கைகள் முறையீடு செய்த நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே ரகசியமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதிலிருந்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் உண்மையான முகங்கள் தெளிவாக வெளிப்பட்டது. பின்னிட்டு நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட எங்களையே குற்றமிழைத்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முன்பாக பணிவாக கைகட்டி நிற்கும் அவல சூழ்நிலையை ஏற்படுத்தியதும் மோசடியாக செயல்படும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இவை அனைத்திற்கும் மேலாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதரவில் இயங்கி வரும் QUBE நிறுவனம் திரைப்பட திருட்டு குற்றம் இழைத்த திரையரங்க உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் தவறான மற்றும் பொய்யான சான்றிதழ் வழங்குவதை தடுக்க கூறி நாங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு செய்த முறையீடுகளும் இதுநாள் வரை கண்டுகொள்ளப்படவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக தலைவர் விஷால் அவர்கள் திருட்டு VCD காரன் மற்றும் திருட்டு இணையதளங்களை இயக்கி வரும் நபர்களை கண்டுபிடிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்ததோடு மட்டுமின்றி, அதன் பின்பு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அந்த நபர்களை அடையாளம் கண்டு விட்டதாகவும், விரைவில் அவர்களை பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முன்பும் இழுத்து வந்து நிற்க வைப்பதாக பகிரங்கமாக 
அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அவர் வாய்மூடி மௌனியாக இருப்பதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை.

இது குறித்து பலர் கேள்வி எழுப்பியும் பதில் கூற விஷால் மறுத்து வருகிறார். இந்த நிலை தயாரிப்பாளர்களின் நலன்களுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பானதாகும். ‘‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஓர் குற்றம் மற்றும் அதனை இழைத்த நபர்கள் பற்றி விவரம் அறிந்த எந்த ஓர் தனிநபரும், அந்த விவரத்தை உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காவிடின் அதுவே ஓர் குற்றமாகும் மற்றும் அக்குற்றத்தின் உடந்தை செயலாகவும் கருதப்படும்’’, எனவே நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இதர தயாரிப்பாளர்கள் புகார் அளித்து விசாரணை நடந்துவரும் வழக்குகளில் தலைவர் விஷால் அவர்கள் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி முன்பாக சாட்சியாக முன்னிலையாகி திருட்டு VCD மற்றும் இணையதள திருடர்கள் குறித்து தான் அறிந்த தகவல்களை வாக்கு மூலமாக அளிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அவருக்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அவர் ஏன் அந்த சட்டபூர்வ கடமையை நிறைவேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தையும், உடனடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.
அவர் அவ்வாறாக விளக்கமளிக்க முன்வராவிடின், அவரும் திருட்டு இணையதளங்களுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்படுகிறார் என்று கருதவேண்டி சூழ்நிலையே ஏற்படும். 

மேற்சொன்ன சூழல்களை கருத்தில் கொண்டு, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பின்வரும் 4 கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள்:&

1. சங்க நிர்வாகிகள் திரைப்பட திருட்டு குறித்து நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முன்னெடுத்து செல்ல உரிய சட்ட மற்றும் இதர நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

2. தொடர்ந்து திரைப்பட திருட்டில் ஈடுபட்டு வரும் திரையரங்குகள் என அடையாளம் காட்டப்பட்ட 9 திரையரங்குகளுக்கு புதிய மற்றும் பழைய திரைப்படங்களை வெளியிட தடை விதித்து நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

3.QUBE நிறுவனம் தயாரிப்பாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்படவும் திரையரங்க உரிமையாளர்களுக்கு பொய்யான தவறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

4.குற்ற எண் 175/2018 ல் CBCID, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு நிலுவையில் உள்ள வழக்கிலும் இதர மாவட்ட வீடியோ பைரஸி தடுப்பு பிரிவில் நிலுவையில் உள்ள திரைப்பட திருட்டு குறித்த அனைத்து வழக்குகளிலும் நேரடியாக, சாட்சிய முன்னிலையாகி, திருட்டு VCD க்காரன் திருட்டு இணையதளக்காரர்கள் குறித்த தகவல்களை வாக்கு மூலமாக அளிக்க வேண்டும். அந்த வாக்கு மூல விபரங்களை உடனிடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்சொன்ன நான்கு கோரிக்கைகளையும் இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் முழுமையாக ஏற்று செயலாக்கம் செய்திட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாவிடின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களால் சங்க உறுப்பினர்களின் நலன்களை காக்க முடியவில்லை என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து புதிய நிர்வாகிகள் செயல்பட வழிவிட வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகள் ஏற்று செயலாக்கப்படாமலும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி விலக முன்வராத சூழ்நிலையும் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட  உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை இதன்மூலம் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்நாடு  திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன்காக்கும் நல விரும்பிகள்.

 

1. வாசன் @ சக்தி வாசன் 

வாசன் ப்ரொடக்ஷன்ஸ் ( ராஜா ரங்குஸ்கி )

2. ஷே. முகமது அஸ்லம்

 பிலிம் பாக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் ( ஒரு குப்பை கதை )

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles