.
.

.

Latest Update

சி.சத்யா இசையமைத்திருக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல் இன்று வெளியானது


நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.

விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சையில் இருந்த ஆறுகள் கூட இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை அழிக்க, அவர்களின் பொருளாதாரத்திற்கு அடித்தளமான விவசாயத்தை அழிக்க திட்டமிட்டது. விஷ விதைகளை தூவி நிலத்தை பாழ்படுத்தியது. அதை மீட்டெடுக்க ஃபிடக் காஸ்ட்ரோ பெரும் முயற்சி எடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ செய்த பசுமை புரட்சி இங்கு கூடிய விரைவில் நிகழும். இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை. உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன் என்றார் பாடலாசிரியர் கிருதயா.

விவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் தான் நம்ம விவசாயம் பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது என்றார் இசையமைப்பாளர் சத்யா.

நம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம். இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை மனதால் உணர்கிறேன். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது இணையத்தை தாண்டி வர வேண்டும். விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும். விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள் என்றார் நடிகர் ஜீவா.

அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். 65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம். நல்ல நோக்கத்துக்காக செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை. இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றார் இயக்குனர் அன்பரசன்.

விவசாயிகளை காக்க சொந்த செலவில் ஒரு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். விவசாயிகளை காப்பாற்றுகிறோம் என்பதை விட நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. மிகப்பெரிய போராட்டத்தை இந்த அமைப்பு சந்திக்க வேண்டி இருக்கும், அதை மீறி இந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா.

விழாவில் ஒளிப்பதிவாளர் மோகன், பாபு, இயக்குனர் சதீஷ், எடிட்டர் கேசவன், பாடகர் செந்தில் தாஸ், நடிகர்கள் பவுளி ஜெய்சன், பூங்கொடி, ராஜ், அர்ச்சனா, கோதண்டம், பேபி கோபிகா, பேபி ஷீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles