ஒரு சில நடிகர்களுக்கு சினிமா மீதான காதல் வெறும் நடிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தயாரிப்பாளராகி மக்களை மகிழ்விக்கும் படங்களை தருவதிலும் அவர்கள் முனைப்போடு இருப்பார்கள்.
பல அருமையான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். ‘SHVEDH’ என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனேயே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.
எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பர் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக உருவெடுத்து வருகிறது. ஜெய்யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரும் பலமாகவுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் மற்றும் படத்தின் தலைப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும்”. இப்படத்தை நிதின் சத்யாவுடன் இணைந்து அவரது நண்பர் பத்ரி கஸ்துரியும் தயாரித்துள்ளார்.