.
.

.

Latest Update

தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்


இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.

இது தொடர்பாக பூஷன் குமாரின் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) வரலாற்று வெற்றிக்கு பிறகு, மீண்டும் சாஹோ திரைப்படத்தின் மூலம் பிரபாசை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஒரு மிகப் பிரம்மாண்டமான அதிநவீன திரைக்காவியத்தை படைக்கும் நோக்கில், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர்கள், திரையுலகின் மிக சிறந்த படைப்பாளிகளை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இத்திரைப்படம் பல்வேறு ரம்மியமான புதிய இடங்களில், இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

ஒளி இயக்குனர் மதி, தனது நிபுணத்துவ குழுவுடன் ஒளிப்பதிவை ஏற்றுக்கொள்ள, தொகுப்பாக்கம் பல்துறை திறமையாளர் ஸ்ரீகர்பிரசாத் வசமும், தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர்தரமான அதிநவீன அதிரடி காட்சிகளை சிறப்பாக படமாக்க, சாஹோ உலக புகழ்பெற்ற, சண்டைகாட்சி நிபுணத்துவ இயக்குனர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.

மும்மொழி திரைப்படமான சாஹோவை, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பூஷன் குமார் வட இந்திய மாநிலங்களில் வெளியிடுகிறார். இது குறித்து பூஷன் குமார் பேசும் போது, “சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார். “பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்.”

சூப்பர்ஸ்டார் பிரபாஸ் பேசும் போது, “ஆரம்பத்திலிருந்தே சாஹோ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.”

பாகுபலி (தி கண்க்ளூஷன்) வெளியீட்டுடன் சாஹோ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டதில், ஒரு அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில், முற்போக்கு சூழலில் பிரபாஸ் ஒரு எதிர்மறையான, வில்லத்தமான கதாபாத்திரத்தில் காட்சியளித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் உடன் இணைந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குல்ஷன் குமாரின் டி சீரீஸ் நிறுவனமும், பூஷன் குமாரும் இணைந்து வட இந்தியாவில் வெளியிட, UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் எழுதி-இயக்கும் சாஹோ திரைப்படத்தை அடுத்த வருடம், வெள்ளி திரையில் காணலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles