குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது. 16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில் , மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
– நடிகர் சிவகுமார்
சில இழப்புகள் நம்மால் தாங்கவே முடியாது. ஸ்ரீதேவியின் இழப்பு இந்திய மக்களுக்கே மிகப்பெரிய இழப்பு.
குழந்தை நட்சித்திரமாக அறிமுகமாகி இன்று வரை மிகச்சிறந்த நடிகையாகத் திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு – இது மறைகின்ற வயதா என்றுதான் தோன்றுகிறது. ஸ்ரீதேவி நம்மிடம் இல்லையே என்பது வருத்தமாக இருக்கின்றது.
மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு எனது கனவு கதாப்பாத்திரத்திற்கு (மயில்) கிடைத்த நடிகை ஸ்ரீதேவி. என்னுடைய மயில் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பனை கிடையாது, ஆடம்பரம் கிடையாது. மிகவும் எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் கூறும் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பனை இல்லாமல் நடிக்கிறேன் என்ற அவர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த தருவாயில் தான் நடித்த இடங்களைப் பார்த்து அழுது, இந்த இடத்தை விட்டுப் போக இஷ்டம் இல்ல சார், என்றார். எனது இரண்டாவது படம் சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கு கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தியில் பதினாறு வயதினிலே படத்திற்கு நாயகி யார் என்று பேச்சு எழும் போது நான் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்றேன். வேண்டாம் சார் என்றார், நான் இருக்கிறேன் தைரியமா நடி என்று கூறி நடிக்க வைத்தேன். ஸ்ரீதேவியை இந்தி திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கையில் ஸ்ரீதேவியிடம் உங்கள் நடிப்பு திறன் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க யார் காரணமாக இருந்தார்கள் என்ற கேள்விக்கு பாரதிராஜாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்றார். அது எனக்கு அவர் அளித்த மிகப்பெரிய மரியாதையாக நினைக்கிறேன்.
நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர் ஸ்ரீதேவி. உலகத்திற்குத் தான் நான் நட்சத்திரம், ஆனால் எனக்கு நான் எளிமையானவள் என்றார்.
அவரை வைத்து படம் இயக்கும் திட்டம் வைத்திருந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தி நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.
எந்தக் கல்லூரியிலும் படிக்காத அறிவுப்பூர்வமான கலைசெல்வி, அனைத்து மொழிகளையும் சரளமாக பேசும் கலையுலக ராணியான ஸ்ரீதேவியின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு. அவர் இடத்தைப் பூர்த்தி செய்யப் பல காலம் ஆகும்.
எனது மயிலின் (ஸ்ரீதேவி) மறைவு இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
ஸ்ரீதேவியின் வாரிசுகள் திரையுலகத்திற்கு அறிமுகமாகின்றனர். ஸ்ரீதேவியின் பெயரை அவர்கள் காப்பாற்றுவார்கள்.
திரு.போனி கப்பூருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
– பாரதிராஜா