கொம்பன் விவகாரத்தில் ஞானவேல்ராஜாவுக்காக ஒன்று திரண்ட திரையுலகினர் உத்தமவில்லன் விவகாரத்தில் சுபாஷ் சந்திரபோஸுக்கு ஆதரவாகவும் நேற்று ஒன்று கூடினர்.
கமல்ஹாசன் நடித்த‘உத்தம வில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரித்திருக்கிறார்.இப்படத்தை மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போஸ்.
இந்த நிலையில், 1 கோடி ரூபாய் கமிஷன் கொடு.. இல்லை என்றால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டல்விடுத்திருக்கிறார் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரான ‘ரோகிணி’ பன்னீர் செல்வம்.பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று நினைத்த போஸ், பன்னீருக்கு நெருக்கமான படூர் ரமேஷ் என்பவர் மூலம் பன்னீருடன் மீண்டும் பேசியுள்ளார்.அப்போது பன்னீருக்கு 50 லட்சம், சங்கத்துக்கு 20 லட்சம் என்று முடிவாகியிருக்கிறது. முதல் கட்டமாக அடுத்த நாளே 25 லட்ச ரூபாயை கடன் வாங்கி பன்னீருக்குக் கமிஷனாகக் கொடுத்த போஸ், மீதியை பிறகு புரட்டித் தருவதாக கூறியிருக்கிறார்.
பன்னீர்செல்வமோ தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.இதனால் எரிச்சலான தயாரிப்பாளர் போஸ் 50 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிப் படமெடுத்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே..? என்கிற மனக்கஷ்டத்தில் திரையுலகில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் கூறி இருக்கிறார்.போஸ் மேற்கொண்டு பணம் கொடுக்காததால், கடுப்பான ரோகிணி பன்னீர் செல்வம், தனக்கு விசுவாசிகளாக உள்ள சில தியேட்டர்காரர்களை அழைத்து, உத்தம வில்லன் படத்துக்கு ரெட் போட்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் மே 1 தேதி ‘உத்தமவில்லன்’ படத்தை திரையிடுவது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு,சென்னை திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்,தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் ராமசுப்பு,மதுரை ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் செல்வின்ராஜ்,தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன், கோவை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்,விநியோகஸ்தர்சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ‘உத்தவில்லன்’ திரைப்படத்தை மே 1 ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது.