.
.

.

Latest Update

தமிழ்த் திரையுலக வேலை நிறுத்தம் வாபஸ் – நடிகர் விஷால் அறிவிப்பு..!


திரையுலகில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து வரும் மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால்.

ஆனால் இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும், தமிழ் திரைப்பட வர்த்தக சபையும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நிராகரித்துவிட்டன. எப்போதும்போல தியேட்டர்கள் இயங்கும் என்று அறிவித்தார்கள்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பாக விஷால் தலைமையில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் தமிழக முதலமைச்சரை சந்தித்து திரையுலகப் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

இதனால் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அவசர கூட்டம் இன்று மாலை பிலிம் சேம்பர் கட்டிடத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் மே 30-ம் தேதியன்று துவங்கவிருந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த வேலை நிறுத்த முடிவு கைவிடப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அறிவித்தார்.விஷால் இந்தக் கூட்டத்தில் பேசும்போது “தேர்தலுக்கு முன்பு பல்வேறு அணிகளாக இருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. அனைவருமே ஒரே அணிதான். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் மட்டுமே திரையுலகம் ஜெயிக்கும்.

நாம் பயந்தது போலவே திரைப்படத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரியை 28% என்று அறிவித்துள்ளார்கள். நாம் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல.

தணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக எங்களுடன் அப்போதே பேசினார்கள். நம்முடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.

ஆனால் இப்போது இந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். ஏனென்றால் செல்வமணி சார் வந்து சில விஷயங்களை நம்முடன் கலந்து பேசி முடிவு செய்துள்ளார். எனவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்.

எங்களுடைய வேலை நிறுத்த அழைப்பை ஏற்று சில திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார்கள். அவர்களிடம் நன்றியையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஜி.எஸ்.டி. வரி வந்தவுடன் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தனது படத்தின் வியாபாரம் என்ன என்பது தெரிந்துவிடும். இனிமேல் தவறாக போய் பணம் திரும்ப வேண்டும் என கேட்க முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒவ்வொரு படத்தின் வசூல் என்ன என்பதும் தெரியவரும். மல்டிப்ளக்ஸ் மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது வைக்க வேண்டும். அப்போதுதான் எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியவரும்.

ஆன்லைன் புக்கிங்

ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 120 ரூபாய், ஜி.எஸ்.டி வந்தவுடன் 153 ரூபாய் வரும். இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் அவர்கள் 30 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு வாங்குகிறார்கள். ஒரு ரசிகர் படம் பார்ப்பதற்கு அவர்களுக்கு பணம் போகிறது.

ஆகவே தயாரிப்பாளர் சங்கமே தனியாக இணையம் தொடங்கும். அப்பணம் தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நமது படத்தை திரையரங்கில் போடுவதற்கு வேறு ஒருத்தர் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தயாரிப்பாளர் சங்கத்தின் இணையத்தில் அது 10 ரூபாயாக இருக்கும். அதில் 2 ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படும்.

க்யூப் நிறுவனப் பிரச்சினை

க்யூப் நிறுவனம் தற்போது ஒரு படத்துக்கு 20 ஆயிரம் நிர்ணயம் செய்து நிறையவே சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 20 ஆயிரம் வாங்குகிறார்கள்.

ஆனால் ஹைதராபாத்திலிருக்கும் ஒரு நிறுவனம் 5 ஆயிரத்துக்குச் செய்து தருகிறோம் என்கிறார்கள். அதுவும் ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய்தான். 2K, 4K, Barco, Sony போன்ற எந்தவொரு format என்றாலும் 5 ஆயிரம்தான் என்கிறார்கள். வாரத்துக்கு பணம் கட்டும் முறையில் 2500தான் என்றார்கள். அதன்படி பார்த்தால் திரையரங்கில் ஒரு காட்சிக்கு 150 ரூபாய்தான் செலவாகும்.

எனவே நமது தயாரிப்பாளர்களின் நலன் கருதி வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அந்த புதிய 5 ஆயிரம் கட்டண நிறுவனத்துடன் இணையலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் நமது தயாரிப்பாளர்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். சிறு தயாரிப்பாளர்களுக்கு இதில் பாதிதான். வெறும் 2500 ரூபாய் மட்டுமே செலவாகும்.

க்யூப் நிறுவனத்தை அழைத்து வேறொரு நிறுவனம் 5 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என்கிறார்களே என்று பேசினோம். ஆனால் அவர்களோ, நாங்கள் சரியான பணத்துக்குத்தான் செய்து கொடுக்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் 5 தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம் என்றார்கள். அப்போது பிரகாஷ்ராஜ் சார் ‘என்ன லஞ்சம் கொடுக்கிறாயா?’ என கேட்டார். அப்போது போனவர்கள்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. இப்போது இப்பிரச்சினையை நான் கையில் எடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.கேபிள் தொலைக்காட்சி

பாபா கேபிள் விஷன் நிறுவனத்தால் நமது தயாரிப்பாளர்களின் படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ்களை லோக்கல் கேபிள் தொலைக்காட்சிகளுக்கு விற்றுத் தருவதாகச் சொல்லி ஒரு மாதத்துக்கு 20 லட்ச ரூபாய் என நம்முடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.

நம்முடைய உழைப்பை போட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசியபோது, ‘எங்களிடம் பட உரிமை இருக்கிறது’ என்றார்கள். ‘உங்களுக்கு படம் போடுவதற்கு யார் உரிமை கொடுத்தது?’ என்று கேட்டோம். அதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை . அவர்களை வெளியே அனுப்பிவிட்டோம்.

அடுத்து வந்தவர் ‘60 லட்ச ரூபாய் தருகிறேன்’ என்றார். அவருக்கும் ‘முடியாது’ என கூறிவிட்டோம். தற்போது ஒன்றரை கோடிவரை கேட்கிறார்கள். அந்த ஒன்றரை கோடியே குறைவு என்று ஞானவேல்ராஜா பேசி அதற்கான பணிகளை பேசி வருகிறார். வெறும் பாடல்கள், காட்சிகள் மட்டும் போடுவதற்கு ஒன்றரை கோடி தருகிறேன் என சொல்கிறார்கள்.

1100 கேபிள் தொலைக்காட்சிக்கு ஒரு முறை போடுவதற்கு ஒரு சிறு திரைப்படத்தை திரையிடக் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு 42 லட்சம்வரை தருகிறோம் என்கிறார்கள். இன்னும் தொலைக்காட்சி உரிமம், பாடல் உரிமம் உள்ளிட்ட எதுவுமே விற்காமல் இப்படி 42 லட்சம் ரூபாய் வருமானம் ஒரு தயாரிப்பாளருக்கு முன்கூட்டியே கிடைக்கும் என்பது எத்தனை தயாரிப்பாளர்களுக்கு தெரியும்…?

கேபிள் தொலைக்காட்சி தொடர்பாக 32 மாவட்டங்களில் அலுவலகம் போடப் போகிறோம். அதன் மூலமாக ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கிடைத்து அது சிறு தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். அதற்கு 2 மாதங்கள் நேரம் வேண்டும்.தயாரிப்பாளர் சங்கத்துக்கு என தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமா என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தொலைக்காட்சி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருட்டு விசிடிக்கு என தனியாக 20 பேர் கொண்ட குழு அமைக்கவுள்ளோம். இன்சூரன்ஸ் தொடர்பான முறைகேட்டை ஆராய்ந்து வருகிறோம்.

ஒரு படத்தின் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, எப்போது வெளியிடலாம் என்று முடிவு செய்கிறீர்களோ அதை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவியுங்கள். அதற்கான ஒரு மொபைல் ஆப் தயாராகி வருகிறது. இணையம், மொபைல் ஆப் ஆகியவை தயாரானவுடன் இனிமேல் படத் தலைப்பு பிரச்சனைகள் அனைத்தையுமே ஒரே க்ளிக்கில் முடித்துவிடலாம்.

படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் ஏற்படும் பிரச்சினைகளையும் அதில் பதிவு செய்தீர்கள் என்றால் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தொலைக்காட்சி, திரையரங்கம், இசை உள்ளிட்ட எந்தவொரு உரிமையும் விற்றீர்கள் என்றால் அதையும் இணையத்தில் தெரிவியுங்கள். ஏனென்றால் நாங்கள் செய்யும் வியாபாரம் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்வது எங்களுக்கும் தெரிய வேண்டும்.தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷாலை தேர்ந்தெடுத்தோம். ஒரு மாதமாகிவிட்டது. இன்னும் எதுவும் நடக்கலையே என்று எண்ண வேண்டாம். இன்னமும் 23 மாதங்கள் இருக்கின்றன. வரும் நவம்பருக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்.

தயாரிப்பாளர்கள் மட்டுமே அவரவர் படத்துக்கு ராஜா. தயவு செய்து அதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள்.

எங்களுக்கு க்யூப், கேபிள் உள்ளிட்ட எதிலிருந்தும் கமிஷனே வேண்டாம். இந்த பதவியை வைத்து நாங்கள் சூப்பர் ஸ்டாராக பெயரெடுக்க விரும்பவில்லை. உங்களுக்கு போட்ட பணமாவது கிடைக்க வேண்டும் என்றுதான் உங்களுக்காக நாங்களும் உழைத்து வருகிறோம்.

நம்முடைய சொத்தை பிறர் தவறாக உபயோகித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் செலவழித்த பணம் அவர்களுக்குத்தான் திரும்ப கிடைக்க வேண்டும், வேறு யாரும் அதை திருடக் கூடாது. பஞ்சாயத்து என்பதற்கே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இடமில்லை. நமது சங்கத்தில் வெளிப்படைத்தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.

தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள். பழைய சங்கம் போல இங்கு கோஷம் போடவெல்லாம் முடியாது. அனைவரும் சங்கத்துக்கு வாருங்கள்.. உங்களுக்கு நல்லது மட்டுமே செய்ய காத்திருக்கிறோம்…” என்று சொல்லி முடித்தார் நடிகர் விஷால்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles