வரும் ஜூலை 15-ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் சங்கத் தேர்தல் வேலை நாட்களில் நடப்பதால் பல நடிகர்கள் வெளியூர்களிலிருந்து சென்னை வந்து வாக்களிப்பது சிரம்ம் என்றும், வாக்குப் பதிவு நடைபெறும் இடம் போக்குவரத்து நெருக்கடி தரக் கூடியதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வைத்துத்தான் நடத்த வேண்டும் என்று கோரி நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி, எல்லாம் சரியாகவே நடப்பதாகவும், வாக்குப் பதிவன்று போக்குவரத்திற்கு போதிய ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் தனது பதில் மனுவில் சொல்லியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ரவிச்சந்திரபாபுவின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்ட பின்னர், இன்று துவங்குவதாக இருந்த வேட்பு மனு தாக்கலை நடத்தலாம். ஆனால் நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் இந்த நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவையாக இருக்கும் என்று சொல்லி தீர்ப்பை தேதி சொல்லாமல் தள்ளி வைத்தார் நீதிபதி.
ஆனால் இன்று காலை திடீரென்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பினை வழங்கியுள்ளார் நீதிபதி. அதன்படி நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிப்பதாகவும், இரண்டு வாரங்களுக்குள் சரத்குமார் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியானதும் இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று நடிகர் விஷால் தெரிவித்தார்