திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் வரும் மே-1-ம் தேதி வெளியாகும் இன்று அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, சித்ரா லட்சுமணன், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஷம்தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.
சென்ற ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். பின்பு அமெரிக்காவில்தான் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்பியதால் படம் தள்ளிப் போடப்பட்டது.
மேலும், ‘லிங்கா’, ‘ஐ’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு வரிசையாக வந்ததினால் மீண்டும், மீண்டும் ஒத்திப் போடப்பட்ட இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
‘விஸ்வரூ’பத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் கமல்ஹாசனின் படம் என்பதால் அனைவருமே இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.