.
.

.

Latest Update

காவல் துறை அதிகாரி வேடத்தில் “ராட்சஷன்” படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்



மிகவும் கவனமாக சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து திரை வர்த்தகத்தில் குறைந்த பட்ச உறுதி அளிப்பவர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஷ்ணு விஷால், தற்போது மிகப்பெரிய லீக்கில் நுழைகிறார்.நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்கள் மட்டுமே பிரதானமாக நடித்து வந்த ஒரு காவல் துறை அதிகாரி வேடத்தில் “ராட்சஷன்” படத்தில் நடிக்கும் அவருக்கு அந்தப் படம் நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்து போகும் படம் என திரை உலகம் கணிக்கின்றது.

“பெரிய ஹீரோவாக ஆகும் தகுதியும், தன்னம்பிகையும், திறமையும் விஷ்ணு விஷாலுக்கு நிச்சயம் உண்டு. அவர் அதில் சாதிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். ராட்சஷன் அவரை உச்ச நிலைக்கு உயர்த்தும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் தயாரிப்பாளர் ‘ஆக்சஸ் ஃபிலிம்ஸ்’ டில்லி பாபு.

அக்டோபர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘ராட்சஷன்” படத்தை பற்றி நிறைய பேச விரும்புகிறார் நாயகன் விஷ்ணு விஷால். ஆனால், படத்தை பற்றி தான் சொல்லும் சின்ன விஷயம் கூட படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை குறைத்து விடும் என்பதால் அமைதி காக்கிறார்.

“நான் போலீஸ்காரர் ஆகும் ஆர்வம் இல்லாமல், எதேச்சையாக காவல்துறை அதிகாரியாகும் ஒருவரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவம், இதற்கு முன் காவல்துறை அதிகாரி உடையை அணியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே இல்லை” என உற்சாக மிகுதியில் பேசுகிறார் விஷ்ணு. இது தான் இந்த படத்தில் அவரை நடிக்க ஈர்த்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

இதை தவிர இந்த படத்தின் மீது ஆர்வத்தை தூண்டிய விஷயம் என்ன என்று கேட்டால், “நிச்சயமாக, இயக்குனர் ராம்குமாரின் ஆச்சரியமான அணுகுமுறை தான். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு அவரிடம் இருந்து இப்படி ஒரு பெரிய படம் வரும் என யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.
ராம்குமார் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்த “ராட்சஷன்” கதையை சொல்ல கேட்டு மெய் மறந்து போனேன். இது அவரது 2-ஆண்டு கடின உழைப்பின் வெளிப்பாடு. நிச்சயம் அனைவரும் பாராட்டுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றார் விஷ்ணு.

டிரெய்லர் மற்றும் விளம்பர காட்சிகள் ராட்சஷன் ஒரு திகில் படமாக இருக்குமா என்று மக்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒரு கொடூரமான பொம்மையை பார்த்த உடன் அப்படி தோன்றுவதில் வியப்பிலை. இதை பற்றி விஷ்ணு கூறும்போது, “இது மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஒரு உளவியல் த்ரில்லர். ஆம், காட்சி விளம்பரங்களில் நாம் பார்த்த ‘பொம்மை’ ஆர்வத்தை தூண்டியது உண்மை, அது கதையின் ஒரு வலிமையான காரணமாக இருக்கும் என்பதை மட்டும் இப்போது உறுதி செய்ய முடியும்” என்றார்.

நாயகி அமலா பால் பற்றி விஷ்ணு கூறும்போது, “நாயகி கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக எழுதப்பட்டிருந்தது. ஒரு முதிர்ச்சியடைந்த நடிப்பை வேண்டியது. அமலா பால் சமீப காலங்களில் வித்தியாசமான வேடங்களிலும் நடித்து, புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் அவர் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்பினோம். படத்தில் அவரின் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தில், முழுக்க பயணிக்கும் ஒரு 5 முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. முண்டாசுப்பட்டியில் காமெடியில் கலக்கிய முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் இந்த படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்” என்றார்.

ஆக்சஸ் ஃபிலிம்ஸ் சார்பில் டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஆர். ஸ்ரீதர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளி இடும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையில் ஏற்கனவே நான்கு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன, பின்னணி இசையும் மிகப்பிரமாதமாக வந்திருக்கிறது. P.V. சங்கர் ஒளிப்பதிவு ஏற்கெனவே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles