வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது :
“நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக்ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.
‘நான் சிகப்பு மனிதன்’என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது.
அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார். ” இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.