சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமென்றால் சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் மல்லிகா.’ ஆட்டோகிராப்’ படத்தில் அறிமுகமானவர் மல்லிகா. ‘ சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே இருந்தார். தற்போது ‘பழனிலே கனகம்’ என்ற படம் மூலம் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதுபற்றி மல்லிகா கூறியது:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் நடித்திருக்கிறேன். மலையாள படவுலகில் எனது சினிமா பயணம் கடினமாகவே இருந்தது. ஒரு நடிகையிடம் நடிப்பை தவிர சிலர் வேறு சிலவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விருப்பத்துக்கு (பாலியல் தொடர்பு) இணங்க கேட்கிறார்கள். விருப்பம் என்று எதை குறிப்பிடுகிறேன் என்பது பலருக்கும் தெரியும். சினிமாவில் உள்ள எல்லோருமே இப்படிப்பட்டவர்கள் என்று சொல்ல வரவில்லை.
இவர்களில் சிலர் விதிவிலக்காகவும் உள்ளனர். இதை வெளிப்படையாக நான் கூறுவதற்கு காரணம், என்னுடைய வாழ்க்கைக்காக சினிமாவை நம்பி நான் இருக்கவில்லை என்பதால்தான். எனது கருத்தை மற்ற ஹீரோயின்களும் ஒப்புக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் ஸ்டார் ஆக வேண்டும் என்பதால் இதுபற்றி அவர்கள் பேச மாட்டார்கள். ‘ பழனிலே கனகம்’ படம் மூலம் இயக்குனராகிறேன். பாவனா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திலும் அவர் நடிகைதான். அவருக்கு படங்களில் டூப் போடும் துணை நடிகையாக நான் நடிக்கிறேன். துணை நடிகை என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கிறார் என்பது அப்பட்டமாக படமாக உள்ளது. பலரிடம் இந்த வேடத்தில் நடிக்க கேட்டு மறுத்துவிட்டதால் நானே இந்த வேடத்தில் நடிக்கிறேன். இவ்வாறு மல்லிகா கூறினார்.