அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி ஜோடியாக நடிக்கும் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை தி.நகரில் இருக்கும் சிவாஜியின் வீடான ‘அன்னை இல்ல’த்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் தனுஷ், விவேக், பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், இயக்குநர் விக்ரமன், சத்யராஜ், ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இசையை வெளியிட்டுப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.அவர் பேசும்போது, “நடிகர் திலகம் சிவாஜியை நான் முதன்முதல்லா 1978-ல் ‘நான் வாழ வைப்பேன்’ படத்தின்போதுதான் சந்தித்தேன். அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் அவர் எனக்கு போன் செஞ்சார். ‘இன்னிக்கு உனக்கு ஷூட்டிங் இருக்கா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்றேன். ‘அப்ப சரி.. என் வீட்டுக்கு வா.. இன்னிக்கு நம்ம வீட்ல பிரியாணி விருந்து இருக்கு..’ என்றார்.
அப்போதுதான் முதல்முறையா இந்த வீட்டுக்கு நான் வந்தேன். அப்போது இந்த வீட்டில் இருநூறு பேருக்கும் மேல் இருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் இப்படி குடும்பத்துடன் சாப்பிடும் பழக்கம் இந்தக் குடும்பத்தில் இருந்த்து.
‘அண்ணாமலை’ படத்தில் நான் நடித்தபோது நடிகர் திலகத்தை மனதில் வைத்துதான் நடித்தேன். அவர் காலத்தில்.. நடிகர் திலகம் சிவாஜி உயிருடன் இருக்கும்வரையிலும் அவருக்கென்று போட்டியே இருந்ததில்லை. அப்படிப்பட்ட இந்த சிவாஜி குடும்பத்தின் பாரம்பரியத்தைக் காக்கும் சுமையும், பொறுப்பும் இப்போது தம்பி விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது. அதை அவர் காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.
இங்கே தம்பி விஷால் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார். பட விமர்சனங்கள் பற்றிச் சொன்னார். படங்களை விமர்சனம் செய்வது அவரவர் உரிமை. ஆனால் அப்படி விமர்சனம் செய்வதற்கும் ஒரு நாகரிகம் வேண்டும். ஒருவரை வீட்டுக்கு அழைத்து சாப்பிடுங்க என்பதற்கும், நல்லா சாப்பிடுங்க என்பதற்கும் வித்தியாசம் இருக்கு. இதை மனதில் வைத்து விமர்சனம் செய்தால் எல்லாருக்குமே நல்லாயிருக்கும்.
இதேபோல் விநியோகஸ்தர்களும் ஒரு படத்தை வாங்கி ஓரளவுக்குத்தான் லாபம் வைத்து வியாபாரம் செய்யணும். அதிகமான பணத்துக்கு ஆசைப்பட்டு அதிக லாபம் வைத்து விற்பனை செய்து அனைவரையும் கஷ்டப்படுத்தக் கூடாது. படத்தை வியாபாரம் செய்பவர்கள் படம் விக்கிறதுக்காக அனைத்து வகையான யுக்தியையும் கையாள்வார்கள். ஆனால் வாங்குபவர்கள்தான் யோசித்து வாங்கணும்..” என்று அறிவுரை வழங்கினார்.