அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும், பெரிய சூப்பர் ஸ்டார்களும் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை நடிகர் விஷால் கர்நாடகாவிற்கு சென்றே பேசிவிட்டு வந்திருக்கிறார்.
‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் கலந்து கொள்வதாக இருந்த்து. விஷால் படத்தின் பாடல்களை வெளியிட கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் டவுன் ஹாலில் நடக்கவிருந்தது. ஆனால், திடீரென நடிகர் சிவராஜ்குமார் அவசரமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருந்ததால் அவரால் விழாவில் கலந்து கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது.
பெங்களூருவில் நேற்று மாலை பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நடிகர் விஷாலும் விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள்.
“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை…” என்று அவர்கள் தங்களுடைய பேச்சில் குறிப்பிட்டார்கள்.
அதனை தொடந்து அந்த விழாவில் விஷால் பேசும்போது, “என் உடல் மண்ணுக்கு… என் உயிர் தமிழுக்கு.. போக்குவரத்து நெரிசலால்தான் இங்கு வருவதற்கு காலதாமதமாகிவிட்டது.
நான் தமிழில்தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், என் தாய் மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன்.
தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம். அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை.
மொத்தத்தில் நாம் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பது அவசியமற்றது. இந்தியா என்று வரும்போது அனைவருமே ஒன்றுதான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.
ஏன் எங்களை தமிழர்கள் என்று ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள். கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமையிருப்பதால் கேட்கிறோம். தண்ணீர் கேட்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதையும் செய்து தருவதற்கு தயாராக இருக்கிறோம்…” என்று பேசியிருக்கிறார் விஷால்.
இதுவரை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற எந்தத் திரையுலக பிரபலமும் இது மாதிரி பேசியதில்லை. விஷாலின் இந்த வெளிப்படையான பேச்சால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்களாம். ஆனால் எந்தவொரு ‘சம்பவமும்’ நடைபெறாமல் விஷால் திரும்பி வந்திருக்கிறார்.
இந்த அளவுக்காச்சும் ஒரு நடிகருக்கு தைரியம் இருக்கிறதே என்றெண்ணி சந்தோஷப்பட வேண்டியதுதான்..!