2-D-Entertainment சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
‘மகளிர் மட்டும்’ இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, இயக்குநர் பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2-டி- தயாரிப்பாளர் ராஜாவின் தாயார் சாந்தா கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா பேசும்போது, “எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நீண்ட நாட்கள் கழித்து எனது அம்மா இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ளார்.
சூர்யா இல்லையென்றால் இங்கு நானில்லை. பெண்கள் பணிபுரியும்போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதேபோல் சூர்யா, கார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தினமும் எனக்கும் மதியச் சாப்பாட்டை வீட்டில் இருந்தே அனுப்பி வைத்தார்கள்.
எனது அப்பா எப்போதுமே நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது தப்ஸ்-அப் காட்டி அனுப்பி வைப்பார். இதேபோல் சூர்யாவும் நான் எப்போது படப்பிடிப்புக்கு கிளம்பினாலும், என்னை வண்டியில் ஏற்றிவிட்டு கதவை அடைத்துவிட்டு டாட்டா காட்டி அனுப்பி வைப்பார். ஒரு பெண்ணுக்கு இப்படியொரு ஆதரவை கொடுத்து வருவதற்கு சூர்யாவின் குடும்பத்தில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும், எனது மிகப் பெரிய நன்றி.தமிழ் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும்தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்காக இந்த இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள். பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே என்னை அணுகியுள்ளார்கள்.
ஆனால் இந்தப் படத்தின் முழுக் கதையோடு பிரம்மா என்னை அணுகினார். திருமணமாகாத பெண்ணாக நடிக்க வேண்டும், டூவீலர் ஓட்ட வேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். அப்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இந்தப் படத்தில் பெண்களை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகியிருப்பதற்கு பிரம்மாவிற்கு நன்றி. இந்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநராக நடித்துள்ளேன்.
ஜிப்ரான் அருமையான இசையைக் கொடுத்துள்ளார். நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’ என்ற பெண்ணை மையப்படுத்திய படத்துக்கும் இசையமைக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துகள் ஸார். பெண்களை மையப்படுத்திய கதைக்கு முக்கியத்துவம் அளித்தமைக்கு நன்றி.ஊர்வசி மேடம், பானுப்ரியா மேடம், சரண்யா மேடம் என 3 ஜாம்பாவன்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே கொஞ்சம் கடினமாக இருந்தது. அதற்குப் பிறகு ஒன்றாக பழகி சந்தோஷமாக நடிக்க ஆரம்பித்துவிட்டோம்.
சரண்யா மேடத்துக்குத்தான் உண்மையில் பெண் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் தன்னுடைய குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இடையில் படங்களிலும் நடிக்கிறார், டெய்லரிங் யூனிட் நடத்துக்கிறார்.. நிறைய பெண்களுக்கு வேலையும் கொடுத்திருக்கிறார்.பெரிய நாயகர்களின் படங்களை இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள்.
நாயகர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நாயகர்கள் என்ன செய்கிறார்களோ, அதனை பின் தொடர்வார்கள். சினிமாவில் நடப்பவை இளைஞர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும். தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள். ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நாமளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக நாம் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்…” என்றார்.