இந்த உலகை முழுக்க, முழுக்க நல்லதாக மாற்ற முடியாது. அதேபோல் முழுக்க, முழுக்க கெட்டதாகவும் மாற்ற முடியாது என்கிற சின்ன செய்தியோடு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திரிபுரம்’.
இந்தப் படத்தில் பிரபல காமெடி, குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக பிருந்தா அறிமுகமாகிறார்.
மற்றும் சசிகுமார், சாம்ஸ், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன், ‘பிச்சைக்காரன்’ தர்ஷ்யன், மந்திரவாதியாக வில்லி வேடத்தில் ‘மானாட மயிலாட’ நிகாரிகா, நரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஹாஃபிஸ் எம் இஸ்மாயில், இசை – கணேஷ் சந்திரசேகரன், படத் தொகுப்பு – முகேஷ் ஜி.முரளி, மேனேஜர் – தண்டபாணி, கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை, நடனம் – சஜ்னா நஜம், பாடல்கள் – மோகன்ராஜன், சத்யசீலன், இணை தயாரிப்பு – சுஷ்மா வேதமணி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வேதமணி.இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வேதமணியிடம் படம் குறித்து பேசியபோது, “ஒரு சின்ன மெசேஜுடன் ஹார்ரர், த்ரில்லர் டைப்பில் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள்தான் இந்தப் படத்தின் கதை.
நான் 20 ஆண்டுகளாக இந்தத் திரைத்துறையில் இருக்கிறேன். பல டிவி சீரியல்களிலும், சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். கடும் போராட்டத்துக்கு பிறகு நானே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன்.
இந்த படத்தின் பாடல்களை கேட்டவுடனேயே பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது ஆடியோ நிறுவனம் மூலம் இந்த இசையை வெளியிட முன் வந்திருப்பது படத்திற்கு கிடைத்த பெருமை. விரைவில் இசை வெளியீடு நடக்கும். தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் படம் வெளியாகவுள்ளது…” என்றார்.