அலங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.
விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், “ அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன்.
பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நிச்சயம் அதில் பெரிய கருணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படம் உருவாக்கப்பட்டு அதில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து இங்கு வந்து இன்று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் திறமைகளை காட்டிய இந்த மனிதர்களுக்கு சின்னதா கை தட்டி வாழ்த்தினாலே போதும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம்.
இந்த படத்தில் நியாயமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். கொஞ்சம் நீங்கள் கருணையோடு நடிகர்களை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சப்படவில்லை. அது ” கங்குவா ” படம் தான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. இதைக் கொஞ்சம் கருணையோடு நீங்கள் பார்க்க வேண்டும். சூர்யா ஒரு நல்ல நடிகர் அவருடைய அப்பா சிவக்குமார் ஒரு நல்ல நடிகர். இன்று நம்முடன் சிவாஜி கணேசன் இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை அவர்களோடு வந்தவர் சிவகுமார் அவர் வீட்டில் இருந்து வந்தவர் சூர்யா. உடனே நீங்க கேட்கலாம் நீங்க, அடுத்து சூர்யாவிற்கு கதை கூற போகிறீர்களா என்று அப்படி எல்லாம் இல்லை. நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்.
சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சினிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும் போது அப்படத்தின் இயக்குனர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான். படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.